Monday, March 31, 2008

சொற்கள் தீர்ந்த பொழுதில்...




பின்னிரவின் நீளம்
குறைத்திட முயன்று
தோற்றுக்கொண்டிருந்தேன்..

இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...

ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.

Thursday, March 27, 2008

எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்

என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" கவிதை நூலிற்கு எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்.

இங்கே கேட்கலாம் : http://tamil.sify.com/audio/shylaja/fullstory.php?id=14629661

Wednesday, March 26, 2008

பள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை

நண்பர்களே,

சென்னையில் உள்ள சைவேட் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

http://www.helptolive.org/projects_detail.asp?id=64

உங்களது நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கலாம். நாளைய நம்பிக்கை விதைகளுக்கு நீருற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்.

நன்றி.

Tuesday, March 25, 2008

அம்மா


காய்ச்சலில் நெற்றி
தொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.
(இந்தக் கவிதை ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதியது)

Monday, March 24, 2008

கறை

வேட்டியின் கிழிசலால்
விழுந்தது அடி.

வலியை மறைத்துக்கொண்டு
தைத்துக்கொடுத்தாள்.

கட்சிக்கூட்டம் நோக்கி
மெல்ல நகர்ந்தது
கறைபடிந்த ஆண்மை.

இழந்த சுயத்தால்
இருளில் கரையத்தொடங்கியது
பெண்மை.

Wednesday, March 19, 2008

வினை எச்சம்


படுக்கை நனைத்த‌
மகனை அடித்துவிட்டு
வாசல் வந்தேன்.
உச்சந்தலையில் எச்சமிட்டு
பறந்தது காகம்.

Monday, March 17, 2008

கவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1





1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...


2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.

3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.


4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.


5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு



15-03-2008 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொன்நாள்.

எவருடைய எழுத்து தமிழின் கடைசி மூச்சு வரை இருக்குமோ,

எவருடைய எழுத்தினால் இருண்ட உள்ளங்களில் ஒளி பிறந்தனவோ

எவருடைய எழுத்தினால் முற்போக்கு எண்ணங்கள் தலை தூக்கினவோ

அந்த எழுத்தாளைரை சந்தித்த சிறப்பான நாள்.

அவர் ஜெயகாந்தன்.

நான் எழுத்தில் மட்டுமே தரிசித்த ஒரு மாபெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்து

உரையாடிய அரைமணி நேரத்தின் தொகுப்பு இக்கட்டுரை.

காலை ஏழு மணியிலிருந்தே உள்ளுக்குள் பரபரப்பு. இதயத்தின் துடிப்புச் சத்தம்

என் செவிகளில் கேட்டது.

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? தடுமாற்றத்தின் உச்சத்தில் கரையத்தொடங்கின மணித்துளிகள்.

தனது படைப்பை போலவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படைப்பாளரை

அவரது இல்லத்தில் சந்திக்கப்போவதை நினைத்தாலே லட்சம் பூக்கள் மொத்தமாக மனசெல்லாம் பூக்க ஆரம்பித்தன.

முத்தமிழ் இணைய குழுமத்தின் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா அவர்கள் எழுதிய "ஜெயகாந்தனுடன் சில நிமிடங்கள்" தொடரை

நகலெடுத்து அவரிடம் சமர்பிக்க் வேண்டிய முக்கியமான பணி எனக்குத் தரப்பட்டிருந்ததாலும் அந்தப் பணியை சிறப்பாக செய்துமுடிக்க வேண்டியதாலும் என் பதட்டம் அதிகமாகிக்கொண்டே போனது.

மாலை 4.45க்கு நானும் கவிஞர்.லாவண்யாவும் அவரது வீட்டிற்கு சென்றோம்.

அவரது வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த முதல்நொடி எத்தனை வருடமானாலும் வாடாத மலராய் என் உயிருக்குள் மலர்ந்து நிற்கும்.

அது ஒரு அழகிய வீடு. தமிழின் புதல்வரின் பாதங்களை சுமக்கும் வீட்டுச்சுவரை விமானத்தை தொட்டுப்பார்த்து வியக்கும் ஒரு கிராமத்துச்சிறுவனாக தொட்டுப் பார்த்து நெகிழ்ந்தேன்.

அவரது வீட்டு மொட்டைமாடியில் தென்னங்கீற்றில் வேயப்பட்ட கொட்டகையில்

அவர் இருப்பதாக அறிந்து,மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன்.

அந்தக் கீற்றுக்கொட்டகையினுள் வீற்றிருந்தது இலக்கியச்சிம்மம்.

அவரைப் பார்த்தவுடன் சிலிர்த்துவிட்டது என் இதயம்.

மலர்ந்த புன்னகையுடன் வரவேற்று தன் அருகில் அமரச்சொன்னார் அந்த எழுத்துச் சக்கரவர்த்தி.

இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளரின் அருகில்

மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தேன்.

சீதாம்மா எழுதிய தொடரை அவரிடம் கொடுத்தேன். வாங்கி படிக்க ஆரம்பித்தார்.

நான் அவரை படிக்க ஆரம்பித்தேன்.

அவர் உடல் தளர்ந்திருந்தது. அது முதுமையின் அடையாளம்.

ஆனால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தளராமல் நிமிர்ந்து நிற்கும் அவரது எழுத்துக்கள். இது அவரது இலக்கிய ஆளுமையின் அடையாளம்.

ஒவ்வொரு பக்கமாக நிதானமாக படிக்கத்தொடங்கினார். ஒரு ஆழ்ந்த மெளனம் அங்கே நிலவியது.

பின்னர் என்னுடைய “மயிலிறகாய் ஒரு காதல்” கவிதை நூலை அவருக்கு கொடுத்தேன்.

ஆர்வமுடன் வாங்கி சில கவிதைகள் படித்தார்.

பின் மெதுவாக பேச்சைத் தொடங்கினோம்.

கேட்கின்ற கேள்விக்கெல்லாம் உடனே வந்து விழுந்தது பதில்.

ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு வெண்முத்துக்கள்.

அரைமணிநேர அற்புத நிமிடங்களுக்கு பிறகு அந்த மாமேதையிடம் விடைபெற்று வீடு திரும்பினோம்.

வீடு திரும்பும் வழியில் அவரது நாவல் ஒன்று நினைவில் பூத்தது.

“ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம்” நாவலில் கதையின் நாயகன் ஒரு லாரியில் சென்றுகொண்டிருப்பான். வழியில் சாலையோரக் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணண அவன் பார்ப்பான்.

அருகில் இருப்பவர்கள் இந்த செயல் தவறானது என்று கூறும்போது, இதற்கு முன்னால் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்தேனே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பான்.

இந்தக் கேள்வியின் பாதிப்பு பலநாட்களாய் என்னை பாதித்த கேள்வி. இப்படியும் எழுத இயலுமா என்று எண்ணவைத்த கேள்வி.

அந்தக் கேள்விக்கு சொந்தக்கார எழுத்தாளரை,

எழுபத்தி நான்கு வயது குழந்தை மன கலைஞரை சந்தித்த அதிஅற்புத நிமிடங்களை கடைசிமூச்சு உள்ளவரை அசைபோடும் என் உயிர்.

நெகிழ்வுடன்,

நிலாரசிகன்.

Wednesday, March 05, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 3




1.எதிர்பாரா தருணங்களில்
கிடைக்கின்ற முத்தம்
மின்னலடிக்கும் வெட்கம்.

2.இரவு நதியில் மிதக்கின்ற
என் பிம்பத்தில் ஒளியெறிந்து
விளையாடுகிறது நிலா

3.எவ்வளவு முயன்றும்
எழுத இயவில்லை
என்னால்.
எதுவுமே செய்யாமல்
எழுதிச் செல்கிறாய்
நீ.

4. பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறேன் அம்மாவின்
கதைகளை,நினைவுகளில்.

Thursday, February 28, 2008

பொம்மையாதல்...




உன் ஆதிக்கத்தை
முழுமையாக
தாங்கிக்கொண்டு
நிழலாக தொடர்கிறது
என் நிஜங்கள்...

மிகச்சிறந்த ஓவியத்தை
தனதாக்கிவிட்ட பெருமையில்
வலம் வரும் உன் காலடியில்
சிதைந்த ஓவியமாய்
நசுங்குகிறது
என் விருப்பங்கள்..

என் பதில் எதிர்பாராத
கேள்விகளுடன் துளைத்தெடுக்கும்
உன் முன்னால் ஒரு
பொம்மையாக தினம்தினம்
உணர்வற்றுப்போகிறது
என் பெண்மை.

-நிலாரசிகன்.

Monday, February 25, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 2


1.பறந்து கொண்டே புணர்கின்ற
வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு
வெட்கி சிவக்கிறது கிழக்கு.

2.கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள்
அறிவதில்லை காயத்தின்
ஆழங்களை.

3.அறியாத காரணத்துடன்
சத்தமிட்டு அழுகிறது குழந்தை
இழவு வீட்டில்.

4.குளத்தில் தவறி விழுந்தது
தூண்டில்.
சிரித்துக்கொண்டன மீன்கள்.

5.அடைமழையிலும் அழியவில்லை
குறவன் கல்லறை மேல்
காக்கை எச்சம்.

6.கையசைக்கும் கற்பூரம்
ஆராதனை தட்டில்
வேசியின் சில்லரை

7.சட்டையெல்லாம் சேறு
அழுக்கு அப்பா என்று
சிரிக்கிறது குழந்தை.

8.கவிதையற்ற இரவெல்லாம்
சத்தமிட்டு அழுகிறது
மெளன நிலா.

படம் உதவி : இலக்குவண்

Friday, February 22, 2008

குட்டிக் கவிதைகள்


1.நகம் பெயர்த்த கல்லில்
விட்டுவந்தேன் என்
ரத்தத்தின் சுவடுகளை.

2.கால்நடைகளின் தடங்களில்
தேங்கி இருந்தது மழைநீர்
வறண்ட ஆற்றின் நடுவில்.

3.செம்மறி ஆடுகளின்
பின்னால் செல்கிறான்
பள்ளிகண்டிராத சிறுவன்.

4. வேர்நனைக்கும் நதிக்கு
பூமுத்தங்களை பரிசளிக்கிறது
நதியோர வேப்பமரம்.

5.அறிமுகமாகாத மனிதர்களுக்கும்
கையசைத்து மகிழ்கின்றனர்
ரயில்நிலைய பைத்தியங்கள்.

6.புழுதிபடர்ந்த பூக்களிலும்
தேனெடுக்க வந்தமர்கின்றன
பட்டாம்பூச்சிகள்.

7.கடற்கரையில் பறக்கின்ற
பட்டங்களுடன் போட்டிபோடுகின்றன
சுண்டல் விற்ற தாள்கள்.

8.அடித்து துவைக்கிறாள்
கைநீட்டிய கணவனின்
சட்டையை.

Thursday, February 14, 2008

கவிதைக்கு சொந்தக்காரி - சில குறிப்புகள்...




மார்கழி மாதமொன்றின் அதிகாலையில தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்.

தேவதைகளின் நிறம் கறுப்பென்று வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்.

அனிச்சமலர் மனசுக்குள் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்.

மின்னஞ்சல் பெட்டியை முத்தங்களால் நிரப்பி சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்.

கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றுதின்ற பிஞ்சுமன வஞ்சியவள்.

பூங்குயில் குரலால் இறைபாடல் பாடுகின்ற குழந்தைமன பெண்ணவள்.

என் இதயசிம்மாசனத்தில் நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும் சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்.

இதயத்தில் துவங்கிய காதல் கண்களின் சந்திப்பைக்காண ஏழுமாதம் தவமிருந்தவள்.

முதல் சந்திப்பில் மொழி மறந்து பேச தவித்த பொழுதில் கண்சிமிட்டாமல் சிலையானவள்.

கனவுகளுடன் திரிந்தபோது என் கனவுகளை தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்.

சொல்லித் தெரிவதில்லை காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்.

அவளை அறிமுகப்படுத்திய நண்பனே எட்டப்பனாக மாறியதில் துடிதுடித்தவள்.

கவர்ந்து சென்று வாழ பொருள்தேடி தலைநகரம்
நான் பயணித்த காலத்தில் கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்.

என் கையெழுத்தும் கவிதை என்று கடிதமெழுதிய அவள் பேனாவின் மைத்துளிக்குள் தன் காதலைச் சுமந்தவள்.

வேலைகிடைத்த செய்தியை சொல்வதற்கு தொலைபேசியில் அழைத்தபோது அழுதுகொண்டே வாழ்த்தியவள்.

அழுகையின் காரணமறியாமல் ஆனந்த கண்ணீரென்று நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில் தொலைபேசியில் அழைத்தவள்.

நீண்ட மெளனம் உடைத்து திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை செவிக்குள் சொல்லியழுதவள்.

தவித்து,துடித்து,துவண்டு,அழுது,அடங்கி,வதங்கிய பூவாக மணமேடை ஏறியவள்.

சிறகுகளை இழந்துவிட்டு சிலுவைகளை சுமந்துகொண்டு மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்.

வானத்தை இழந்துவிட்ட நிலவு இன்று எங்கோ ஒரு கானத்தில் காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது.

பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி தொலைந்த காதல் இன்று சட்டைப்பையிலிருந்து வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்
அவள் நினைவுகளின் கனத்தை தள்ளாடியபடி சுமந்து பயணிக்கிறது.

Wednesday, February 13, 2008

அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்....



1.வேலை முடிந்து வந்தபின்
என் கேள்விகளுக்கு
பதில்பேசாத அம்மாவையும்
அப்பாவையும் போலவே
அமைதியாய் இருக்கின்றன
இந்தக் கம்பிகள்.

2.அம்மா,அப்பாவின்
கைகளை நினைத்துக்கொண்டு
இறுகப்பற்றுகிறேன்
ஜன்னல் கம்பிகளை.

3. வண்ண வண்ண
உடைகளை வாங்கித் தர
உழைக்கிறோம் என்றனர்
அம்மாவும் அப்பாவும்.
என் கனவுகள் மட்டும்
கறுப்புவெள்ளையாகி போனதை
உணராமல்.

4.மிருக காட்சி சாலைக்கு
மட்டும் என்னை அழைத்து
சென்றுவிடாதீர்கள் அப்பா
இரும்புக் கம்பிகளுக்கு பின்
அழுகின்ற மிருகங்களுக்கு
என் கண்ணீரின் மொழி
புரிந்துவிடும்!

5.பெற்றோரை வணங்க
வேண்டும் என்றார் ஆசிரியர்.
இப்பொழுது புரிகிறது
கடவுள் போல் கண்ணுக்குத் தெரியாததால்
வணங்க சொல்கிறார் என்று.

6. அப்பா அடித்துவிட்டதற்காக
அழுகிறாள் எதிர்வீட்டு ஒவ்யா.
அடிப்பதற்குகூட அப்பா
அருகில் வருவதில்லையே
என்று அழுகிறேன் நான்.


படம் உதவி: இலக்குவண்.

Tuesday, February 12, 2008

தருணங்கள்...



உன் விரலின் ஸ்பரிசம்
உணர்த்திய பூமாலையின்
பூவாக வாசம்வீசுகிறது
பரிபூரணமாய் என்னை
உன்னிடம் தந்துவிட்ட மனசு..

என்னை உனக்கு
துணையாக்கும்
மஞ்சள்கயிற்றில் சட்டென்று
ஊஞ்சலாடி மறைகிறது
என் தாவணிப் பருவத்தின்
நினைவுகள்..

வர்ணிக்க முடியாத
ஆனந்தத்தில் திளைத்து,
வெட்கத்தில் அழகாக
நகர்கிறது
உனதாகப்போகின்ற என்
மெளனத்தருணங்கள்...


படம் உதவி: இலக்குவண்

Friday, February 08, 2008

என் கறுப்புத்தங்கம்




என் பாதையெல்லாம் முட்களாய் இருந்தபோது என்னோடு பயணித்தவளே...

இன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்
கோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....

நீ இல்லாமல் போனதால் காவியங்கள் எழுத வேண்டிய
என் பேனா கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருக்கிறது..

நம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று
தூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...

முட்டை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..

புல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்
ஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்
வலியுடன் நடமாடுகிறேன்.

கண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன
மழைத்துளிகள்..

கண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்
நினைவுத்துளிகள்..

காதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை
காலத்தால் கரைக்கமுடிவதில்லை.

சிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்
உலர்ந்துவிடுவதில்லை.

புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்
மினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை
சுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.

சுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை
நினைவூட்டுகிறது தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.

தோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக
மாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல் தவித்திருக்கிறேன்..

ஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு மறையும் உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.

பின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும் வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..

பந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்
பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன் சிரிக்க பழகிவிட்டேன்.

எனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.

காலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.
காதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.

ஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.

Thursday, January 31, 2008

மறக்கப்படுதலுக்கான உரையாடல்...

வேலைக்காரிக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தேர்ச்சி பெற்றார்
பாட்டி.

வேலைக்காரனுக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தோல்வி அடைந்தார்
தாத்தா.

அடுக்களை கிடைத்தது
பாட்டிக்கு.
திண்ணை கிடைத்தது
தாத்தாவுக்கு.

மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.

Monday, January 28, 2008

நீ,நான்,காதல்(குறுந்தொடர்) - 2. காதல்காலம்


2.காதல்காலம்:

அவன்:

அதிகாலை பனித்துளியில்
குளித்த ரோஜாவொன்றை
உனக்குத் தந்து "விரும்புகிறேன்"
என்று சொல்லிவிட்டு
வேகமாய் வந்துவிட்டேன்.
கண்மணி!
அந்த சிறுரோஜாவுக்குள் புதைந்து
இருப்பது சொல்ல முடியாமல்
தவித்த என் காதலும்,
சிதையிலிட்டாலும் மாறிவிடாத
என் நேசமும்.

அவள்:

இதயத்தின் நான்கு
அறைகளிலும் ஒலிக்கிறது
நீ சொன்ன காதல்வார்த்தை.
ஒரு தேவதையை போன்ற
மிடுக்குடன் என் வீடு செல்கிறேன்
நீ தந்த ரோஜாவுடனும்
உனக்கென நான் வாங்கி வந்த
ரோஜாவுடனும்!

அவன்:

என்னை மறந்து
வானம்பார்த்து புன்னகைத்துக்
கொண்டிருந்தேன்..
தன்னைப் பார்த்து
புன்னகை செய்வதாக
எண்ணிச் சிரிக்கிறது
அந்த வான் நிலா..
பகல்நிலவு உனக்கு மட்டும்தானடி
என் புன்னகை சொந்தம்
என்று எப்படி புரியவைப்பேன்?

அவள்:

எதிர்வீட்டு குழந்தைக்கு
அதிகமாய் இன்று
நான் முத்தமிட்டதை
சந்தேகத்துடன் பார்த்துச் செல்கிறாள்
அம்மா.
குழந்தையென உன்னை
எண்ணி நான் தருகின்ற
முத்தங்கள் உன்னைச் சேர்கின்ற
நாளுக்காக காதலுடன் காத்திருக்கிறேன்.

அவன்:

கடற்கரையில்
கடல்ரசித்து அமர்ந்திருந்தோம்.
உன் பொன்விரல்களால்
மணலில் கோலமிட்டுக்கொண்டு
தலைகவிழ்ந்திருந்தாய்..
உன் விரல்பற்றிக்கொள்ள
நினைத்து இயலாமல்
அலைரசிக்கிறேன் நான்.

அவள்:

ஏதேதோ பேசிவிட எண்ணி
எதுவும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன்.
ஊமையாக வாழவும் சம்மதம்
நாளெல்லாம் காதல்மொழி
நீ பேசினால்.

அவன்:

தினமும் சந்திக்கிறோம்.
ஒன்றாக உணவருந்துகிறோம்.
ஒரே பேருந்தில் பயணிக்கிறோம்.
இந்த பிறப்பு முழுவதும் பேசினாலும்
தீராத காதலை நெஞ்சுக்குள்
சுமந்துகொண்டு
திருக்குறளென இருவரிகள்
மட்டும் பேசுகிறோம்.

அவள்:

உன்னிடம் பேச
நினைத்ததையெல்லாம்
என் வீட்டு செவ்வந்திச் செடியிடமும்
என் ப்ரிய நாய்குட்டியிடமும்
பேசித் திரிகிறேன்.
எனக்கென்று ஒரு தனியுலமே
உருவாக்கித் தந்தவன் நீ.
மழையைத் தாங்கும் மண்ணைப் போல்
காத்திருப்பேன் வாழ்வெல்லாம்
உனக்காக.

அவன்:

உன் விரலோடு விரல்
கோர்த்து வெகுதூரம்
நடக்க வேண்டும்.
நீ களைத்தால்
கையில் உன்னை ஏந்தி
நம் பயணம் தொடர வேண்டும்.
நான் வேண்டும் வரமெல்லாம்
வண்ணமயில் நீ மட்டும்தான்.

அவள்:


நிலவாக,மலராக,தேன்சிட்டாக,
பட்டாம்பூச்சியாக
மனம் நிறைந்த கன்னியாக
ஒரே ஒரு வாழ்க்கையில்
பல முறை விதவிதமாக
வாழ்கிறேன் நீ தந்த
காதல் வரத்தால்.

3.ஊடல்காலம்:
(தொடரும்)

Thursday, January 24, 2008

இதயத்தில் ஈரம் இருந்தால் உதவுங்கள்...




தனக்கென வாழ்வதில் ஒரே ஒரு வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
பிறர்க்கென வாழ்வதில் ஓராயிரம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள காந்திஜி மறுவாழ்வு மையத்தில்
வழி தவறி வந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள்,வறுமையினால்
கைவிடப்பட்டவர்கள் என்று மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர்.(ஒரு குழந்தையால் பேச முடியாது)

திரு.வானரசு(இவருடைய தந்தையால் துவங்கப்பட்டதுதான் காந்திஜி மறுவாழ்வு மையம்)
இந்த குழந்தைகளை கவனித்து வளர்த்து வருகிறார்.

இவர் ஒரு முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர். இந்தக் குழந்தைகளுக்காக தன் வேலையை
துறந்துவிட்டு முழு நேரமும் இவர்களை கவனித்துக் கொள்கிறார்.

இவர்களுக்கு சரியான வசதியின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

கடந்த மாதம் இவர்கள் தங்கி இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு சுமார் இருபது
நாட்கள் அரசு பள்ளி வளாகத்திலும்,அரசு பொதுமருத்துவமனை வளாகத்திலும்
தங்கி இருந்தனர்.மழையால் மிகவும் துன்புற்றனர்.

தற்சமயம் பூந்தமல்லியில் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு மாத வாடகையாக ரூ 4,500 கொடுக்க வேண்டும்.

இந்தக் குழந்தைகளில் பலர் இலவச அரசு பள்ளியில் படித்தாலும் இரு குழந்தைகளை
ஆங்கில கான்வென்ட் பள்ளியில் சேர்த்துள்ளனர்.(இவர்கள் இருவருக்கும் மாதம் 500 ரூ கட்டணம் செலுத்தவேண்டும்.) அதில் ஒரு சிறுவன் 70 திருக்குறளை அழகாக
சொல்கிறான் - பெயர். கோகுல். வயது - 4



ஒவ்வொரு குழந்தைகளின் கண்களிலும் பெயர்சொல்லத் தெரியாத ஒருவித சோகம் வழிகிறது.

கோகுலத்தில் கோபியர்களில்
மடியில் விளையாடியவனை
இறைவன் என்கிறோம்.
இங்கே மழையிலும் பசியிலும்
தவிக்கும் கோகுலை
என்னவென்று சொல்வது?


நெஞ்சில் ஈரம் இருந்தால் உதவுங்கள் தோழர்களே.

பணம் அனுப்ப விரும்பும் அன்பர்கள் இந்த முகவரிக்கு அனுப்பலாம்.

Indian Bank Account Number : 450345237
Name: Gandhiji Rehabilitation Centre
Branch : Thirumazhisai

Postal Address:

Gandhiji Rehabilitation Centre.
603,Trunk Road,
poonamallee,
Chennai-56 Mobile: 9840931530


கனத்த நெஞ்சுடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 23, 2008

நீ,நான்,காதல் - குறுந்தொடர்





நீ
நான்
காதல்...

(குறுந்தொடர்)

1.பார்வைக்காலம்:

அவன்:

உன்னை முதன்முதலில்
சந்தித்தது நம் கல்லூரியின்
வேப்பமரத்தடியில்..
காற்றில் பறந்துவந்து என்
நெஞ்சில்மோதி விழுந்தது
சில வேப்பம்பூக்கள்.
நெஞ்சுக்குள் பவித்திரமாய் மலர்ந்தது
காதல்பூக்கள்.

அவள்:

தலைகவிழ்வதே வெட்கம்
என்று தவறுதலாக
எண்ணிவிட்டேன் உன்னை
சந்திக்கும் வரையில்..
இமைக்க மறப்பதே வெட்கம்
என்றுணர்ந்தேன்
உன்னை சந்தித்த முதல்நொடியில்!


அவன்:

தினம் தினம் சுமந்துவருகிறேன்
உன்னிடம் காதல் சொல்ல,
அழகழகான வார்த்தைகளை.
கண்சிமிட்டும் சிலை உன்னைக்
கண்டவுடன் மொழியற்று
ஊமையாகித் திரும்புகிறேன்.


அவள்:

இதழ் திறந்து என் செவிக்குள்
தேனூற்றிச் செல்வாய் என்று
காத்திருந்தேன்.
இதழ்பேசா உன் மெளனத்தால்
சிலையாகி நின்றுவிட்டேன்.

அவன்:

என் நீண்ட இரவுகளை
கடிதமாக்கி உன் முன்
சமர்ப்பிக்கிறேன்.
ஒரு அலட்சிய பார்வை தந்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.
முள்ளில் விழுந்த பறவையென
துடிதுடிக்கிறேன் நான்.

அவள்:

புல்லாங்குழலின் இசை கேட்கவே
உன்னிடம் வந்தேன்.
மூங்கிலை மட்டுமே எனக்கு
பரிசளிக்கிறாய் நீ.
கடிதத்தை தூர எறிந்துவிட்டு
என் காதோரம்
இதழ் திறந்து சொல்வாயா
உன் காதலை?

அவன்:

நிலவின் செளந்தர்யத்தை
உன் பூமுகத்தில் உணர்கிறேன்.
நிலவைப்போல் கடைசிவரையில்
எட்டாமல் போய்விடுவாயோ
என்றெண்ணியும் பரிதவிக்கிறேன்.

அவள்:

உன் வானில்
சிறகடித்து பறக்க விரும்பும்
சிறு பட்டாம்பூச்சி
நான்.
வானமாக
நீ மட்டுமே வேண்டும்
பெண்ணிலவும்
நான்.

அவன்:

பார்வைகளை பரிமாறிக்கொண்டே
வாழ்ந்துவிடுவேனா
காலம் முழுவதும்?
தேவதை உன் விழிக்குள்
என் முகம் பார்த்து
நாளை சொல்கிறேன் என்
காதலை.
இரவே கரைந்துவிடு
சீக்கிரம்.

அவள்:

நெஞ்சுக்குள் சுமந்து
திரியும் காதலை
நாளை உன்னிடம்
சொல்லப்போகிறேன்.
காதல் சொல்லத் தயங்கியவன்
சம்மதம் சொல்ல
தயங்கிவிடாதே!
வாடிப்போகும் இந்த
தாவணிமல்லி!

2.காதல்காலம்:

(தொடரும்)