
ஆஸ்திரேலியா = சச்சின்ஒருநாள் கிரிக்கெட்உலககோப்பை தொடங்கப்பட்ட எழுபத்தி ஐந்தாம் ஆண்டிலிருந்து 90ம் ஆண்டு வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் கொடி
கட்டி பறந்த அணி மேற்கு இந்திய தீவுகள் அணி. விவ் ரிச்சர்ட்ஸ்,க்ளவ் லாயிட்,"பிக்பேர்ட்"கார்னர்,மால்கம் மார்ஷல்,மைக்கேல் ஹோல்டிங்
டெஸ்மான் ஹெயின்ஸ்,கிரினிட்ஜ் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி எதிரணியை அடித்து துவைத்து காயபோட்டுவிடும் சூரர்கள்
நிறைந்த மிக பலம் வாய்ந்த அணியாக மே.இ.தீவுகள் விளங்கியது.இரண்டு உலககோப்பை வெற்றி,மூன்றாவது உலககோப்பை பைனல் என்று அவர்களின் கை ஓங்கியே இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வீரராக ஓய்வு பெற்றதாலும் பணம் கொழிக்கும் கூடைபந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பலர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியதாலும் மே.இ.தீவுகளின் வீழ்ச்சி துவங்கியது. லாரா,ஹீப்பர்,சந்தர்பால் என்று ஒன்றிரண்டு சிறந்தவீரர்கள் "சோதா" டீமை வைத்துக்கொண்டு சில காலம் போராடி பார்த்தபோதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்தாளர் இல்லாத காரணத்தால் மே.இ.தீவுகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து ஜிப்பாப்வே,கென்யா போன்ற நாடுகளை மட்டும் அவ்வப்போது வெல்லும் சுண்டெலி அணியாக மாறிப்போனது.
இதற்கிடையே 87ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான உலககோப்பை இறுதிபோட்டியில் மைக் கேட்டிங் செய்த தவறால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா தன் வெற்றிப்பயணத்தை துவங்கியது. ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்த உலககோப்பையில்(92ல்) தோல்வியை தழுவியது. ஆனால் தொண்ணுறுகளில் துவக்கத்தில் பல மிகச்சிறந்த வீரர்களை ஆஸி உருவாக்கியது மார்க்வா,மெக்ரா,ஷேன் வார்ன் அதன்பிறகு பாண்டிங்,மைக்கேல் பெவன்,ப்ர்ட் லீ.
இதற்கு காரணம் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்தவரும் பதினோராயிரம் ரன்களை தாண்டியவருமான ஆலன் பார்டர்.மற்றும் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியே ஆஸி அணியை பலவெற்றிகளை பின்னாட்களில் குவிக்க காரணமாக இருந்த ஸ்டீவ் வாக்.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை பார்த்து எந்தவொரு இளம் வீரனும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டீவ் வாக் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.சுயீங்கம் மென்று கொண்டே விளையாடுவார். ஆனால் ஆட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பிட்ச்சில் அவரது கால் ஒட்டிக்கொண்டதோ என எண்ணும் அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.(99ம் ஆண்டு உலககோப்பை - தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி சிறந்த உதாரணம்)
96ம் ஆண்டு இறுதிபோட்டியில் இலங்கையிடம் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ஆஸி அணியினர். பல வெற்றிகளும் சில தோல்விகளுமாக திரிந்த ஆஸி அணி 99ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்
வீழ்த்த முடியாத வலுவான அணியாக உருப்பெற்றது. பந்தைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கில்கிறிஸ்ட்,ஆஸி அணியில் இடம்பிடிக்க போராடி பல தடைகளை தாண்டி தானொரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்த ஹெய்டன்,கல்கத்தாவில் ஒர் இரவு விடுதி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக முன்பு குற்றம்சாட்டபட்டு விளையாட்டு பையனாக திரிந்து பின் விஸ்வரூபமெடுத்த பாண்டிங்,மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் மார்க்வா,ஒன் டே ஸ்பெசல் மைக்கேல் பெவன்,சுழல் சூறாவளி வார்னே,துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மூர்ச்சையாக்கும் மெக்ரா,கில்லெஸ்பி இவர்களை அனைவரையும் சத்தமின்றி வழிநடத்தும் ஸ்டீவ் வாக். இத்தனை சிறந்த வீரர்களை கொண்டு சென்ற இடமெல்லாம் பெரும் வெற்றிகள்(5 போட்டிகளில் எனில் 5-0 என்று எதிரணியை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்) குவித்து வீறு நடை போட துவங்கியது ஆஸ்திரேலிய அணி.
அதன்பிறகு தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி,2003,2007 உலககோப்பை வெற்றிகள் என ஆஸியின் பலம் ஓங்கியபடியே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தேர்வும் கிரிக்கெட்டில் Professional Approach ம் எனலாம். சிக்ஸ்ர்களாக தூள் பரத்தும் சிமெண்ட்ஸ் கூட அணியின் கட்டுப்பாட்டை மீறியதால் அணியிலிருந்தே தூக்கப்பட்டார். வி.பி தொடரில் பைனலுக்கு செல்ல முடியாமல் ஆஸி தோற்றதால் அணியின் கேப்டன் பதவியும் அணியில் இடமும் பறிபோனது ஸ்டீவ் வாக்கிற்கு.ஒரு போட்டியில் சரியாக விளையாடாவிட்டாலும் அணியில் நீடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியையும் தங்களது கடைசி போட்டியாக எண்ணி முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள் ஆஸி அணியினர். அதனால் எந்த கட்டத்திலும் போராடும் குணம் அவர்களுக்கு உண்டு. பிட்புல் நாய் போல் சாகும் வரை வெறியும் கோபமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் வெற்றி ஆஸிக்கே என்னும் நிலை. தங்களது சொந்த மண்ணில் கேட்கவும் வேண்டுமா? இருவருடங்களுக்கு ஒருமுறை ஆஸிக்கு சென்று நாயடி பேயடி வாங்கி திரும்புவார்கள் இங்கிலாந்து அணியினர். ஆஸ்திரேலிய பிட்ச் வேகபந்து வீச்சுக்கு சாதகமானது. அங்கே சதமடித்தால் இந்தியாவில் 300 அடிப்பதற்கு சமம்.
இப்பேர்பட்ட ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை அடித்த சதங்களில் டாப் டென் என்று வரிசை படுத்தினால்
அதில் பந்தொன்பது வயது அமுல்பேபி ஒருவரின் சதமும் அடங்கும். அவர் நம் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய வீரர்கள் கவாஸ்கர் உட்பட ஆஸி மண்ணில் திணறியதாக சரித்திரம் சொல்கிறது. எண்பதுகளின் துவக்கத்தில் சந்தீப் பட்டேல் அடித்த 174 ரன்களுக்கு பின் Spectacular Innings என்று எதுவுமில்லை. உடம்பில் அடிவாங்கி தட்டுத்தடுமாறி நூறு ரன்கள் எடுப்பதற்கு பதில் கிரிக்கெட்டை விட்டே ஓடிவிடலாம் என்று நினைக்க தோன்றும்.காரணம் மெக்டமர்ட் போன்ற மிக வேக பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள்.
உலகின் வேகமான பிட்ச் என்றழைக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆஸியின் வேக பந்துவீச்சாளர்களை தடுத்து,அடித்து ஆடிய சச்சின் எடுத்த சதம் கண்டபின் உலகமே "Boy Wonder" என்று சச்சினை புகழ ஆரம்பித்தது.
ஆறு ரன்களும் நான்கு ரன்களும் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை எப்படி அடிப்பது என்பதில்தான் சச்சின் தனித்து நிற்கிறார்.ஆங்கில அகராதி தொலைந்துவிட்டால் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை கொண்டே மீண்டும் உருவாக்கிவிடலாம் என்பார்கள். அதுபோல் கிரிக்கெட் பற்றிய விளக்க நூல் தொலைந்துவிட்டால் சச்சினின் ஆட்டத்தை கொண்டே மீண்டும் உருவாக்க முடியும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். ஸ்கொயர் கட் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்,கவர் ட்ரைவ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை போன்று ஒவ்வொரு ஷாட்டிலும் Sachin is a perfectionist!
அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் சதம் அடித்திருக்கிறார்.
குறிப்பாக சிட்னி மைதானம் பலமுறை சச்சினின் சதத்தை கண்டது. 2004ல் ஆஸி சுற்றுப்பயணத்தின்போது தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுவனிடம் பெயர் கேட்கிறார் சச்சின். அதற்கு அவன் தன் பெயரும் சச்சின் என்கிறான். சச்சின் என்பது இந்திய பெயராயிற்றே இது எப்படி ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை இன சிறுவனுக்கு சூட்டப்பட்டது? ஆர்வத்தோடு அவனது அப்பாவை கேட்கிறார். 92ல் சச்சின் சிட்னில் அடித்த 145 ரன்களை கண்ட பரவசத்தில் தனக்கு பிறந்த மகனுக்கு சச்சினென்று பெயரிட்டிருக்கிறார் அவர்!
சச்சின் சுள்ளான் அணிகளிடம் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் தட்டையான பிட்ச்சில்தான் சதமடிப்பார் என்று பரவலான கருத்தை சிலர் கொண்டிருக்கலாம். அது தவறு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள்,ஒன்பது சதம் எண்ணற்ற அரை சதம். இதைவிட வேறென்ன வேண்டும்? சச்சினால் இந்தியா ஜெயித்ததா என்கிற கேள்வி எழலாம்.
டைகர் உட்ஸ் கோல்பில் சிங்கம். ஸூமேக்கர் கார் ரேஸில் சிங்கம்.ரோஜர் பெடரர் டென்னிஸில் சிங்கம். காரணம்? இவை அனைத்தும் தனிநபர் விளையாட்டு. ஒருவேளை கிரிக்கெட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் சச்சினை சிங்கம் என்று வர்ணித்திருக்கலாம். பத்து சுண்டெலிகள் அதில் சில குள்ளநரிகள்(அசாரூதீன்,ஜடேஜா,மனோஜ் பிரபாகர்) இவர்களோடு போருக்கு ஒரு சிங்கமும் சென்றால் வெற்றி எப்படி கிடைக்கும்?
எப்போதும் 100% தருபவர் சச்சின்.அதனால்தான் ஆஸியோடு சச்சினை ஒப்பிட முடிகிறது.
கடைசி வரை போராடும் குணம்,எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வெற்றியை உடனே மறந்துவிட்டு அடுத்த போட்டியில் மீண்டும் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம்,தொடர்ந்து கிரிக்கெட் மீதான தீராக்காதல் இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் சச்சினுக்குமான மிக முக்கிய ஒற்றுமை. இந்த வெறி,இந்த ஈடுபாடு தொடர்ந்து இருப்பதால்தான் இருபது வருடங்களாக சிம்மசொப்பனமாக சச்சின் விளங்குகிறார்.
சச்சினுக்கும் அவரது பள்ளித்தோழர் காம்ளிக்கும் குரு ஒருவர்தான்.அவர் சமீபத்தில் மறைந்த அச்ரேக்கர். அவரிடம் இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேள்வி எழுப்பியபோது சச்சின் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவன் காம்ளி என்றார். அப்பேற்பட்ட காம்ளி காணாமல் போனது எதனால்? அவர் மைதானத்தை விட தன்னிடம் சிறப்பாக விளையாடுவார் என்றார் ஒரு மாடல் நடிகை. அதுமட்டுமின்றி ஹோட்டலில் அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில் சத்தமாக ஸ்பீக்கர் அலற ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பார் காம்ளி.அதனால் கிரிக்கெட் மீதான கவனம் குலைந்து காம்ளியின் ஆட்டம் மோசமடைந்தது. தொடர்ந்த ஈடுபாட்டினாலும் ஒழுக்கத்தினாலும் சச்சின் சிறந்த வீரர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக நம் முன் திகழ்கிறார்.கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் டான் பிராட்மேன் தனது கனவு அணியை வெளியிட்டபோது உலகமே வியந்துபோனது.காரணம் அந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர் மட்டுமே இருந்தது. அது சச்சின்.
மீண்டுமொரு சச்சின் வாசகத்தோடு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:
Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives.
- BBC Sports, on Sachin Tendulkar
-நிலாரசிகன்